13 January 2008

உங்கள் மனநிலை எப்படி?

பொதுவாகவே நாம் ஒரு பண்டிகைனாலோ ,ஒரு விசேஷம்னாலோ எண்ணெய் தேய்து குளிப்பது உண்டு .அதுவும் எங்க வீட்டுல சாதாரணமாகவே, வாரத்துக்கு ஒரு தடவை கண்டிப்பாக எண்ணெய் குளியல் உண்டு. அதுவும் தீபாவளின்னா சொல்லவே தேவையில்லை, நடுராத்திரி 5 மணிக்கெல்லாம் எழுப்பிவிட்டு நம்மள பாடா படுத்திருவாங்க. ஊரில் இருந்த வரை இந்த கொடுமையை அனுபவித்துக்கொண்டிருந்த நான், சென்னைக்கு வந்த நாள் முதல் எண்ணெய் குளியலை மறந்தேவிட்டேன். ( நல்ல வேளையாக குளியலை மறக்கலை). சில நாள் முன்பு எங்கள் ஊருக்கு போயிருந்தபோது , இதுபற்றி நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

அப்போது என் நண்பன் ஒருவன், " எங்க அப்பத்தாக்கு கூட போன மாசம் தான் எண்ணெய் குளியல் நடந்தது " என்றான். எனக்கு எதுவுமே புரியவில்லை. பின் அவனே விளக்கினான் , " பல நாட்களாக உடல் நலமில்லாமல் படுத்தபடுக்கையாக இருக்கும் பெருசுகள் , தங்களின் சொத்துக்களின் வாரிசுகள் கவனிக்காததால் படுக்கையிலேயே மலம் இருந்துகொண்டும் அதன் மேலையே படுத்துக்கொண்டும் இருக்கும் 90வயதை கடந்தவர்கள் , நன்றாக வாழ்ந்து இன்று நாற்றத்தின் நடுவே வாழ்க்கையை சகித்துக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த எண்ணெய் குளியல் நடத்தப்படுகிறது. இப்படி அவர்கள் படும் அவஸ்தையை சகிக்க முடியாமலோ , அவர்களையே சகிக்க முடியாத பாசக்கார பிள்ளைகளும் இது போன்ற குளியலை நடத்துவார்கள். சொந்த பந்தங்களுக்கு சொல்லி விட்டு, ஒரு சுப முகூர்த்த திருநாளில் , படுத்திருக்கும் பெருசை எழுப்பி எண்ணெய் தேய்த்து , சீயக்காய் தேய்த்து குளியல் நடத்துவார்கள்.

அதுபோன்ற தள்ளாத வயதில் அவர்களின் உடலில் சூடு இல்லாமல் இருக்கும். இந்த பாசக்கார குளியலை தாங்காத அவர்களின் உடல் மேலும் குளிராகி நிச்சயம் அன்று இரவே ஆவி பிரிந்துவிடும். அவர்களுக்கு பாலூற்றி வழியனுப்பிவிடும் வைபவமும் உண்டு.

இதே போல் என் நண்பனின் தாத்தாக்கதையும்.
என் நண்பனின் தாத்தா மரணப் படுக்கையில் விழுந்து, மருத்துவர்களால் 'இனி தேறாது' என்று கைவிடப்பட்ட சூழ்நிலையில் உறவினர் மற்றும் சுற்றத்தாருக்கும் தகவல் அனுப்பபட்டது.எல்லோரும் வந்தாகிவிட்டது.முதல் சுற்று அழுகை முடிந்து காப்பி சாப்பிட்டு இரண்டாம் சுற்று அழுகைக்கு கூட்டம் போனது.தாத்தாவின் நெஞ்சுக்கூடு எந்த மாற்றமும் இல்லாமல் ஏறியிரங்கியது.முதல் இரவு கழிந்து,அடுத்த இரவும் வந்தது.அழுகை ஓய்ந்து கூட்டம் ரஜினி படத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தது.அவ்வப்போது ஒருவர் தாத்தா படுத்திருக்கும் அறைக்கு சென்று எட்டிப் பார்த்துக்கொள்கிறார். தாத்தாவிடம் எந்த மாற்றமும் இல்லை.உடலில் எந்த அசைவும் இல்லை.ஆனால் சீரான மூச்சுக்காற்று வந்து கொண்டிருந்தது.அடுத்து வந்த இரண்டு நாட்களும் இப்படியே சென்றது.மெலிதாக கூட்டம் குறையத்தொடங்கியது.'பெரிசு உசிர புடிச்சு வைச்சுருக்கு..கணேசன் வாத்தியாருக்கு சொல்லியனுப்புங்க..ரெண்டு பேரும் அவ்வலவு சினெகிதம்..அவரு பார்த்தாதான் இது உயிர விடும்போல'.. என்றெல்லாம் பேச்சு கிளம்பிவிட்டது.அந்த வீட்டில் காப்பி ஆற்றுவது ஒரு தொடர் செயல் போல் ஆகிவிட்டது.செட்டியார் கடையில் புதிதாக மளிகை லிஸ்ட் கொடுத்தாகிவிட்டது.மாமா குடும்பமும், சித்தப்பா குடும்பமும் இருந்து காரியம் முடித்துவிட்டு செல்லும் திட்டத்தில் வந்திருந்தார்கள்.ஊரில் நிறைய வேலைகளை விட்டுவிட்டு வந்திருக்கிறார்கள்.தாத்தா கிளம்புகிற முடிவில் இல்லை.ஒரு வயதான பாட்டி சொன்னாள்..'மண்ணாசை இருந்தாலும் இப்படித்தான் இழுத்திட்ருக்கும்..கொஞ்சம் பாலோடு மண்ணை கலந்து கொடுங்க' என்றாள்.கூட்டம் யோசித்தது.நண்பன் சொன்னான்'பேசாமல்..நைட் எல்லோரும் தூங்கின பிறகு தலையனையோடு அந்த ரூமுக்கு போய்ட்டு வந்துரவா?'என்று.எல்லோரும் பேசி கொஞ்சம் மண்ணை பாலோடு கலந்து தாத்தாவுக்கு கொடுக்கச் சென்றபோது தாத்தா தலைசாய்ந்து மூச்சில்லாமல் இருந்தார்............

இது சரியா தவறா என்ற வாதத்திற்க்கு நான் வரவில்லை. ஆனால் இது போல் நமக்கும் ஒரு நாள் நடக்கும், அன்று நம் சொந்தங்கள் எண்ணெயுடன் வந்தால் ,எதிர்து போரட முடியாததால் , படுத்தேயிருப்போம். அப்போது எந்த மாதிரியான மனநிலையில் இருப்போம் என்று சொல்லத்தெரியவில்லை. ( சொல்லத்தெரியவில்லையா இல்லை நினைக்கவே பயமான்னு தெரியல ).

No comments: